ஆந்திராவில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை கட்டையால் தர்ம அடி கொடுத்து பாடம் புகட்டிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அடுத்த கண்ணவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், பணி முடிந்து நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பெண் ஊழியர் வந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வழிமறித்து, அந்த பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் வாகனத்தை நிறுத்தி கீழே கிடந்த கட்டையை எடுத்து சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வலி தங்க முடியாமல் அந்த இளைஞர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் அந்த பெண் ஊழியரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.